Friday, December 21, 2018

வெள்ளாற்று கரை நாகரிகம். அத்தியாயம் : 1 ஸப்த துறை அறிமுகம்.


காரியானூர் முதல் பெலாந்துறை வரை
       எந்த ஊருக்கு சென்று வந்தாலும் நம் வீட்டை அடைந்ததும் நமக்கு ஏற்படும் மகிழ்சியைப் போல உள்ளது இந்த பதிவை எழுதும் போதும். எத்தனை ஊர்களின் வரலாற்றினை அறிந்து ஆராய்ந்து எழுதினாலும் நம் சொந்த மன்னைப் பற்றி எழுதும் சுகம் அலாதியானது.  

        நம் முன்னோர்கள் பயணம் செய்வதற்கு தரை வழித் தடங்களை விட நீர் வழித் தடங்களுக்கே முன்னுரிமை வழங்கி உள்ளனர். அந்த வகையில் ஆறுகளின் ஓட்டங்களின் ஊடாகவே பயணங்கள் இருந்திருக்க கூடும். ஆறுகளின் கரைகளில் முக்கிய துறைகளை அமைத்து அதன் வழியாக பயணமும், வாணிபமும் நடத்தியுள்ளனர். ஆறுகளையொட்டியே  நாகரிகங்களும் வளர்ந்திருக்கின்றன. நைல் நதி நாகரிகம், வோல்கா நதிக்கரை நாகரிகம்,  சிந்துநதிக் கரை நாகரிகம், கங்கைக்கரை நாகரிகம், குமரிக்கரை நாகரிகம், தாமிரபரணிக்கரை நாகரிகம், காவிரிக்கரை நாகரிகம், கெடிலக்கரை நாகரிகம் ஆகியவையே இதற்கு சான்று. அந்த வகையில் நம் கடலூர் மாவட்டத்தை கடந்து கடலில் பாயும் வெள்ளாற்றிற்கும் இப்படி ஒரு  நதிக்கரை  நாகரிக வரலாறு இருக்க வேண்டும் என்ற தூண்டுதலே இந்த தேடலின் முதல் புள்ளி. 

     நமது தேடலின் முதல் குறிப்பு வெள்ளாற்றையொட்டி இருக்கும் ஏழு துறைகள் என்று சொல்லப்படும் ஸப்த துறை கோயில்கள். 
ஆதிதுறை(காரியனூர்), திருவாலந்துறை, திருமாந்துறை, சு.ஆடுதுறை, திருவதிட்டத்துறை(திட்டக்குடி), திருவட்டத்துறை, திருக்கரந்துறை(பெலந்தூரை).
வாய்ப்பாட்டு மஹாபாரதத்தில்
வெள்ளாற்று குறிப்பு 
இந்த ஏழு துறைகளுக்கும் இடையில் இருக்கும் தூரம்  3-5 மைல்களுக்குள் இருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கின்றன. நாம் இந்த துறை கோயில்களின் சிறப்புகள் பற்றியோ, வழிபாடு முறைகளை பற்றியோ ஆராயப்போவதில்லை. இந்த துறை கோயில்களை சுற்றி உருவாகியிருந்த நாகரிகங்களைப் பற்றி ஆராய முற்படுவோம். 

     இந்த ஏழு துறைகளில் திட்டக்குடி மற்றும் திருவட்டத்துறை கோயில்கள் மட்டும் ஆற்றின் இடப்பக்கம் அஃதாவது ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. மீதமுள்ள 5 கோயில்கள் ஆற்றின் வலப்பக்கம் அஃதாவது ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. அனைத்து துறைகளும் ஆற்றின் தென்கரையிலேயே அமைந்திருந்திருக்கக் கூடிய  சாத்தியங்களே மிகையாக காணப்படுகின்றன. சான்றுகள்படி ஏழு துறைகளும் வெள்ளாற்றின் ஒரு பக்கக்கரையில் அமைக்கப்பட்டதாக அறியப்படுகிறது. நம் முன்னோர்கள் கூற்றுப்படி இன்று திட்டக்குடி நகரின் தெற்கில் ஓடும் வெள்ளாறு ஒரு காலத்தில் நகரின் வடக்கில் ஓடியதாக சொல்லப்படுகிறது. கடந்த நூற்றாண்டில் ஆற்றின் போக்கு நகரின் தெற்கே மாறியதாகவும் சொல்லப்படுகிறது. அப்படி இருப்பின் திருவட்டத்துறை வரை ஊரின் வடதிசையில் ஓடிய ஆறு தென்திசையில் பாய்ந்திருக்க கூடும். இதற்கான ஆதாரங்களை சேகரிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். 

         ஸப்த ரிஷிகளால் பிரதிஷட்டை செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த ஏழு துறைகளையும் செப்பனிட்டு பராமரிக்க பல்வேறு  காலக்கட்டங்களில் பாண்டிய, சோழ அரசுகள் முயற்சி எடுத்து வந்துள்ளன. இந்த கோயில்களை சுற்றி ஊர்களை உருவாக்கி அங்கே நதிக்கரை நாகரிகம் தழைக்க வழி வகுத்துள்ளனர். அந்த ஊர்களில் கோயில்களை நிர்வகிக்க தனாதிகாரிகளையும், படைவீர்களாயும்; கட்டுமானகங்களை கவனிக்க சிற்பிகளையும், கொல்லர்களையும்; நான்கு கால பூஜைகள் நடைபெற சிவாச்சாரியார்களையும் குடியமர்த்தியுள்ளனர்.
காவியக் கம்பன்
நூலில் வெள்ளாற்றுக் குறிப்பு 
   
    அந்த ஊர்களுக்கு பொருட்களை கொண்டு சேர்க்கவும், வெளியே கொண்டு செல்லவும் இந்த துறைகளை ஆற்றுத் துறைமுகங்களாக பயன்படுத்திருக்க வேண்டும். வெள்ளாற்றின் மணல் ஒரு காலத்தில் அரியவகை தாதுக்களை கொண்டதாக இருந்துள்ளது. ஏழு துறைகளில் ஒரு துறையில் தூர்ந்த நிலையில் இருக்கும் சுரங்கத்தில் இந்த அதிசயத்தைக் கண்டதாக சமீபத்தில் ஒருவர் கூறக் கேட்டோம். பாண்டிய, சோழ அரசுகளின் எல்லை அரணாக வெள்ளாறு இருந்துள்ளதால் இங்கே படை வீரர்களுக்கு தேவையான போர்க்கருவிகள்  செய்வதற்கான கொல்லன் பட்டறைகளும் இருந்திருக்க வேண்டும். கி.பி 710-களில் நந்திபுரத்து முற்றுகைக்கு பிறகு  அரிகேசரி பராங்குச மாறவர்ம பாண்டியனிற்கும், பல்லவ மன்னனான இரண்டாம் நரசிம்மவர்மனிற்கும் இடையே மிகப்பெரிய போர்கள் வெள்ளாற்று கரையில் நிகழ்ந்தேறியது.

       வெள்ளாற்றின் நாகரிக சிறப்பையும் இந்த ஏழு துறைகளின் வரலாற்றையும்  அறிய முயற்சிகள்  தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  எதிர்வரும் நமது சந்ததியினர்க்கு நாம் எதைக் கற்றுத்தர போகிறோம்? வெள்ளாற்று கரை நாகரிகத்தின் முன்னோடிகளான நமது முன்னோர்கள் இந்நாகரிகத்தை முன்னெடுத்துச் செல்லவும், பாதுகாக்கவும் இரத்தமும் சதையுமாக, சிந்தனையுடனும் உணர்வுகளுடனும் உலா வந்த கரையின் மீது நாம் இன்று நாம் அமர்நதிருக்கிறொம். அந்த வரலாற்றை அவர்களுக்கு கற்பிப்போம். தேடல் தொடர்கிறது.  பின்வரும் பதிவுகளுக்காக காத்திருங்கள். 

Monday, December 17, 2018

காடவராய மாமன்னர்களின் கோட்டை தலைநகரம் சேந்தமங்கலம்!!!



      ஆபத்சகாயயேஸ்வரர் என்கிற ஸ்ரீ வானிலை கண்டீஸ்வரர் தரிசனம். மாமன்னன் காடவராயன் கோப்பெருஞ்சிங்கனின் இந்த கோட்டைக் கோயில் கெடிலம் ஆற்றுப்படுகையில் சேந்தமங்கலம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 14 கிலோமீட்டரில் உள்ளது சேந்தமங்கலம்.

          கோயிலின் தோற்றம் இன்றும் அறிய இயலாத ஒன்றாகவே  இருந்து வருகிறது. லிங்கம் சுயம்பு. ஆவுடையார் 300 அடிக்கு மேல் இருக்க வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது. லிங்கத்தின் கீழும், கோயிலைச் சுற்றியும்  புதையல் இருப்பதாக பல நூற்றாண்டுகளாக  வருகிறது. இதனை நம்பி பல 
மூலவர் 
வருடங்களுக்கு முன் ஒரு கொள்ளைக் கும்பல் லிங்கத்தின் கீழ் இருக்கும் புதையலை எடுக்கும் எண்ணத்தில் கோயிலினுள் புகுந்து லிங்கத்தை அப்புறப்படுத்த முயற்சித்து தோண்ட ஆரம்பித்தது. ஆனால் இருபது அடி தோண்டியும் மகாவிஷ்ணு ஈசனின் அடியை காண முடியாமல் திகைத்ததுபோல் கொள்ளைக் கும்பலும் ஆவுடையரின் அடியை அடைய முடியாமல் விழி பிதுங்கி நின்றது. புதையலும் இல்லாமல், தோண்டியவரை புதைக்கவும் முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றது அந்த குழு. இன்றும் கோயிலைச் சுற்றி புதையல் இருக்கும் வதந்தி உலாவந்து கொண்டுதான் இருக்கிறது. 

   பல்லவர்கள் காலத்தில் இக்கோயில் விஸ்தரிக்கப்பட்டதாக  கூறப்பட்டாலும் கோயிலின் மேற்கூறை முகப்பில், ஒரு காலத்தில் சோழர்களின் அபிமான சின்னமாக இருந்த மான்  பொறிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம்  நடராசர் கோயிலுக்கும் சேந்தமங்கலம் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. கற்களால் தட்டினால் இசை எழுப்பும் இரண்டு கற்குதிரைகள் கோயில் அருகில் ஏரிக் கரையில் வடிக்கப்பட்டுள்ளன.
சிதைந்த அரசவை மண்டபம் 

 ஏழு சுற்று கருங்கல் மதில்களையும், அகழிகளையும் அரணாக கொண்டிருந்த கோட்டை இன்று பரிதாபமாக நிற்கிறது. தாயார் சன்னதி நிர்கதியாக்கிவிடப்பட்டது போல்  உள்ளது. பகலில் செல்வதற்கே சற்று பயமாக தான் உள்ளது. நமது  கோயில்கள் வழிப்பாட்டுத் தலங்களாக மட்டுமில்லாமல் அரசவை காரியக் கூடங்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு ஆதாரமான  100 கால் அரசவை மண்டபம் சிதைந்து பரிதாபமாக காட்சியளிக்கிறது. 
மூலவர் ஆபத்சகாயயேஸ்வரர். நாம் காலை 9.30 மணியளவில் சென்றபோதும் கூட பூஜை செய்வதற்க்கோ, திருநீறு வழங்குவதற்க்கோ கூட ஒருவரும் இல்லை. காலையிலேயே பூஜையை முடித்துவிட்டு சென்றிருந்தார் சிவாச்சாரியார். இப்படி கேட்பாரற்று கிடக்கும் இந்த கோட்டைக்கோயிலின் வரலாறு பிரமிப்பானது. 
உட்பிராகாரம் 
     
  சோழ நாடு கம்பரால் 14- நூற்றாண்டில் தான் "காவிரி நாடு" என்று அழைக்கப்பட்டது. ஆனால் மூவரில் மூத்தவர் திருநாவுக்கரச பெருந்தகையால் 4-ஆம் நூற்றாண்டிலேயே கெடில நதி பாயும் பகுதி தேவாரத்தின்  பன்னிரண்டாம் திருவதிகை  பதிகத்தில்  "கெடில நாடு"  என்று  குறிப்பிடப்பட்டுள்ளது. 
           
    சோழர்களின் தஞ்சை-திருச்சி-பழையாறை, பல்லவர்களின் காஞ்சி ஆகிய தலைநகரங்களைப் போல  சேந்தமங்கலம் நகரைத்  தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர் காடவராயர்கள். இன்றைய உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கெடிலம்  நதியின்  கரையில் இந்த நகரை நிர்மாணித்து "கெடிலக்கரை நாகரிகத்தின்" புனர்நிர்மானத்திற்கு வித்திட்டவர்கள் கடவராயர்கள். பல்லவர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, பிற்கால சோழ ஆட்சியில் சோழ மன்னர்களின் கீழ் சிற்றரசர்களாகவும், படைத் தளபதிகளாகவும் ஆட்சியாளர்களாகவும்  இருந்தவர்கள் காடவராயர்கள். விக்ரம சோழன்(1120-1135) காலத்தில் காடவராயர்கள் மிக்க செல்வாக்குமிக்கவர்களாக இருந்துள்ளனர்.  கடலூர் துறைமுகம் தோற்றுவிக்க அச்ச்சாரமிட்டவர்கள் இவர்கள் தான்.

  
சிதைந்த மதில் சுவர்கள் 
 12-ஆம் நூற்றாண்டின்  தொடக்கத்தில் கெடிலக் கரையில் திருமாணிக்குழி வட்டாரத்தில்  வளந்தனார் என்ற காடவர் தொடங்கி அவரது மரபு வழி வந்த ஆட்கொல்லி, அரச நாராயணன், கச்சிராயன், வீரசேகரன், சீயன் எனப் பல்வேறு  காடவராயர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். சீயனின் மகன் தான் "சீயன் கோப்பெருஞ்சிங்கன்" என்னும் முதலாம் கோப்பெருஞ்சிங்கன். இவரின் காலத்திலேயே காடவராயர்கள் என்னும் காடவர்களின் புகழ் தழைத்தோங்கத் தொடங்கியது. 


          முதலாம் கோப்பெருஞ்சிங்கனின் ஆட்சி தொடங்கிய காலத்தில் தான் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கரம் ஓங்கி சோழ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சித் தொடங்கியிருந்தது. சோழ சாம்ராஜ்யம் மூன்றாம் ராஜராஜ சோழரின் ஆட்சியின் கீழ் இருந்தது. மூன்றாம் ராஜராஜ சோழர் நாம் அறிந்த சோழ மகாசக்ரவர்திகள்  ராஜராஜ  சோழர் எனப்படும் முதலாம் ராஜராஜ சோழரில் இருந்து 13-வது தலைமுறை. பாண்டியர்களின் சூழ்ச்சியால் நாட்டை இழந்த மூன்றாம் ராஜராஜ சோழர் இன்றைய திண்டிவனம் அருகே தெள்ளாறு என்னும் ஊரில் தனது படைகளுடன் முகாமிட்டு இருந்தார். சிலகாலமாக சோழர்களுடன் பகை பாராட்டி வந்த கோப்பெருஞ்சிங்கன் படை திரட்டிச் சென்று மூன்றாம் ராஜராஜ சோழரை வென்று, சேந்தமங்கலம் கோட்டைக் கோயிலில்  அவரை  சிறைப்படுத்தினான்.

       இதையறிந்த போசள மன்னன் வீர நரசிம்மன் சேந்தமங்கலம் மீது படையெடுத்து மூன்றாம் ராஜராஜரை மீட்டு சோழ அரியணையில் மீண்டும் ஏற்றினார். இதன் பின்னர் மீண்டெயெழுந்த கோப்பெருஞ்சிங்கன் அடுத்த சில மாதங்களில் பெரம்பலூரில் வீர நரசிம்மனை வீழ்த்தி நாடு கடத்தினான்.

       தன் தந்தைக்கு பிறந்து இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் 1243- ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தான். இரண்டாம் கப்பெருஞ்சிங்கன் தன தந்தையைப் போல் அல்லாமல் சோழர்களுடன் நட்பு பாராட்டினான். மூன்றாம் ராஜேந்திர சோழரை ஆட்சியில் அமர வைத்ததில் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் பங்கு அலாதியானது.    கும்பகோணம் முதல் காஞ்சிபுரம் வரைலிருந்த அணைத்து மன்னர்களையும் வென்று தனது சாம்ராஜ்யத்தை நிறுவி இருந்தான்  இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன். இவனின் போர் முறைகள் மிகவும் கொடூரமாக இருந்தது. போரில் சரணாகதி  அடைந்தர்வர்களை கூட கொலை செய்ய ஆணையிட்டான். சோழர்களின் நட்பை பெற்றதாலும், மிகுந்த வலிமை மிக்க படையை கொண்டதாலும் பல சிற்றரசுகள் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனிடம் சரணடைந்தன.

 
     சேந்தமங்கலம் என்னும் சிறு நகரில் தலைமை அமைத்து ஏறக்குறைய தமிழகத்தின் பாதியை ஆட்சி செய்து வந்தான் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன். மாவீரனாக மட்டுமில்லாமல் மக்களின் அபிமானத்தை பெற்ற மன்னனாகவும் விளங்கினான். சிவபெருமான் மீது கொண்ட பற்றினால்  தஞ்சையிலிருந்து ஆந்திர மாநிலம் திராட்சராமம்  வரை சோழர்களால்  நிர்மாணிக்கப்பட்ட பல்வேறு சிவாலயங்களுக்கு கொடைகளை வழங்கினான். சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலின் கீழை கோபுரத்தை கட்டியவன் இவனே.  சேந்தமங்கலத்திற்கு தென் திசையில் வீற்றிருக்கும் தில்லை கூத்தனை வழிப்பட்ட பிறகே தன்னுடைய அன்றாட அலுவல்களை தொடங்குவானாம் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன். ஆபத்சகாயயேஸ்வரர் கோயிலுக்கு சேந்தமங்கலத்திலிருந்து பலகாத தூரம் வரை நிலங்களை உடைமையாக்கிருந்தான். ஆனால் அரசியல் சக்கரம் எப்போதும் போல சுழல்வதல்ல. ஒரு காலத்தில் பாண்டியர்களின் நட்பை பெற்றிருந்த காடவராயர்கள் இன்று எதிரிகளாகி இருந்தனர். 1279-ல் பாண்டியன் மாறவர்மன் குலசேகரன் சோழ நாடு,திருமுனைப்பாடி, சேந்தமங்கலம் ஆகிய அரசுகளை வென்று பாண்டிய நாட்டுடன் இணைத்துக் கொண்டான். இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் வீழ்த்தப்பட்டான். காடவ குல ஆட்சியும் முடிவுக்கு வந்தது.
சிதைந்து கிடக்கும் மதில் சுவர் 
       இப்படியாக பல சிற்றரசுகளையும், பேரரசுகளையும் ஆட்டம் காண வைத்த கோப்பெருஞ்சிங்கர்களின் பெரும் கோட்டையாக விளங்கியது சேந்தமங்கலம். அதன் பிறகு செல்வங்களுக்காகவும், சொத்திற்காகவும் பல்வேறு காலகட்டங்களில் பலதரப்பட்ட எதிரிகளின் சூழ்ச்சியால் இந்நகரம் சூறையாடப்பட்டது. . இப்பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு விசுவாமாக இருந்த பலரால் இக்கோயில் சொத்துக்கள், நிலங்கள் அபகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  கெடிலக்கரை நாகரிகத்தின் முன்னோடிகளாக காடவராயர்கள் இருந்துள்ளனர். இவ்விடத்தின் முக்கியத்துவம் தெரியாமல் பராமரிக்காமல் விட்டது போல் இல்லை, திட்டமிட்டே கண்டுகொள்ளாமல் விட்டது போல் உள்ளது. 


Friday, December 7, 2018

மர்மங்களின் தேசம் தஞ்சை பெருவுடையார் கோயில்!!!

               

தஞ்சை பெருவுடையார் கோயில் எங்கள் மாமன்னன் ராஜகேசரி ஸ்ரீ ஸ்ரீ ராஜராஜசோழன் என்ற மும்முடி சோழ சக்ரவர்த்தி அவர்களால் 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பெருவுடையாரின் அருளால் ராஜராஜசோழ சக்ரவர்ததிகளும் ராஜேந்திர சோழ சக்ரவர்ததிகளும் பல்வேறு தேசங்களை  சாளுக்கிய வரலாற்றின் சான்றாக பதாமி உள்ளிட்ட நகரங்களும், விஜயநகர பேரரசின் ஹம்பியும், பல்லவர்களின் புகழ் கூறும் மாமல்லபுரமும்  இருப்பது போல் தங்கள் காலடியில் பணிய வைத்தனர் எம் சோழ குலத்தின் வரலாற்றின் ஆக சிறந்த ஒரு சொத்து பெருவுடையார் கோயில். என்னுடைய முந்தைய பதிவுகளில் நாள் பல்வேறு முறை குறிப்பிட்டதுள்ள போல் பல்வேறு  மர்மங்களையும், அமானுஷ்யங்களையும் உள்ளடக்கியது சோழ குலம். தெளிவுபடுத்தப்படாத பல்வேறு சூழ்ச்சிகளும், அவிழ்க்கப்படாத பல்வேறு முடிச்சுகளும் நிறைந்தது சோழ வரலாறு.

அதுபோலவே பெருவுடையார் கோயிலும் பல்வேறு மர்மங்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

"நானும், என் அக்கன் கொடுத்தனவும், என் பெண்டு பிள்ளைகள் கொடுத்தனவும், அடியேன் வலது கால் மண்டியிட்டு, இடது கால் பெருவிரல் மடித்து அய்யன் பெருவுடையார் முன் எந்த பிரதிபலனும் எதிர்பாராம்ல வணங்குகிறேன்" - ஸ்ரீ ஸ்ரீ ராஜராஜ சோழ சக்ரவர்த்தி. 

"எவன் ஒருவன் அகந்தையில் தன் செருக்கு மிகுதியால் தான் தான் உயர்ந்தவன் என்ற எண்ணத்தில் பெருவுடையார் சன்னதியில் உள்நுழைகிறானோ, அவன் செருக்கு அழிக்கப்படும; அவன் நிர்மூலமாக்கப்பட்டு சாகக்கடவது."

நிகழ்வு 1: இந்திரா காந்தி
          முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் 1984 - ஆம் ஆண்டு ராஜராஜசோழ சக்ரவர்ததிகளின் சதைய விழாவில் பங்கேற்க தஞ்சை மண்ணில் முதல்முதலாக கால் பதித்தார். அப்போது  பெருவுடையாரை தரிசனம் செய்தார். அடுத்த சில வாரங்களிலேயே அக்டோபர்  31- ஆம் நாள் தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


நிகழ்வு 2 : எம்.ஜி.ஆர்
        இந்திரா காந்தி பங்கேற்ற அதே நிகழ்வில் அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களும் கலந்து கொண்டார். அடுத்த சில நாட்களிலேயே இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட அதே அக்டோபர் மாதம் எம்.ஜி.ஆர் அவர்களும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறுநீரக சிகச்சைக்காக நியூயார்க் அழைத்து செல்லப்பட்டார். அப்போது தேர்தல் நேரம். படுத்துக்கொண்டே தமிழக சட்டசபையில் 195 அதிமுகவிற்கு வென்று கொடுத்தார். சிகிச்சை முடிந்து 1985 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ஆம் நாள் தமிழகம் திரும்பி 10-ஆம் நாள் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதற்கு பிறகு முன்பை போல் அவரால் இயல்பாய் செயல்பட முடியவில்லை. அவர் உயிருடன் இருந்த அடுத்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு முறை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வந்தார். இறுதியாக பூரண குணமடையாமலே 1987-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம நாள் இறந்தார்.

நிகழ்வு 3 : கருணாநிதி
    2010-ஆம் ஆண்டு பெருவுடையார் கோயிலின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாடப்பட்டது. இதனை பெரிய விழாவாக தமிழக அரசே ஏற்று நடத்தும் என்று அன்றைய முதல்வர கருணாநிதி அறிவித்தார். ஒரு வாரம் நடைபெற்ற நிகழ்வின் கடைசி இரண்டு நாட்கள் நிகழ்வில் கருணாநிதி கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. நாடகம், இசைக் கச்சேரி, நாட்டிய நிகழ்ச்சிகள் என அல்லோலப்பட்டது தஞ்சை. இதற்கான மேடை, பந்தல், அரங்கம் என சகலமும் பெருவுடையார் கோயிலின் உள்ளேயே ஏற்பாடாகியிருந்தது. கருணாநிதி அவர்கள் பங்கேற்ற செப். 25-ஆம் நாள்1000 நடனக் கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்வு கோயிலுக்குள்ளேயே நிகழ்ந்தேறியது.

       இவை நடந்தது 2010 செப்டம்பர்  மாதம். 2011 மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க பெரும் தோல்வியடைந்தது. கருணாநிதியின் உடல்நிலையும் குன்றத் தொடங்கியது. அடுத்து வந்த 2016 தேர்தலிலும் தி.மு.க வெற்றிபெறவில்லை. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி மீண்டும் தமிழக முதல்வர் ஆக முடியாமலேயே 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் நாள் இறந்தார்.
    
   இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்திரா காந்தி அவர்களும், எம்.ஜி.ஆர் அவர்களும் பெருவுடையார் கோயிலின் பிரதான வாயிலான கேரளாந்தகன் கோபுர வாயிலின் வழியாகவே கோயிலின் உள்ளே பிரவேசித்து உள்ளனர். இந்த கோபுர வாயிலும், பெரிய நந்தியும்  கோயில் கட்டி முடிக்கப்பட்ட காலத்தில் கட்டியதல்ல. பிற்காலத்தில் சேர நாட்டு படையெடுப்பின் போது ஆரல்வாய்மொழி போரில் சிறைபடுத்தப்பட்ட 11,031 நம்பூதிரிகளைக் கொண்டு கட்டப்பட்டது. இக்கோபரத்தை கட்டிய போது நம்பூதிரிகள் துர்மந்திரங்களை ஓதிக் கொண்டே பணியாற்றியதாக அறியப்படுகிறது. 

   இதனால் சோழ குலமும், கோயிலும் சபிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கட்டுமானத்தை முன்னின்று நடத்தியவர்  சோழத் தளபதி மாவீரர் பெரியபழுவேட்டரைையர் மறவன் கந்தனார் அவர்களின்   சிஷ்யையான வீர மங்கை அநுக்கமா என்னும் திருநங்கை ஆவார். ஆனால் மூடப்பழக்கங்களின் நம்பிக்கையற்றவர் என்று கூறப்பட்ட கருணாநிதி சேரலாதன் வாயிலை தவிர்த்து வடக்கு வாயில் வழியாக உள்நுழைந்தார்.

       பெருவுடையார் கோயிலினை கட்டி முடித்த அடுத்த நான்கு ஆண்டுகளில், அதாவது கி.பி.1014 ஆம் ஆண்டு ராஜராஜசோழ சக்ரவர்ததிகள் இறையடி சேர்ந்தார்.  இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகியோர்க்கு நேர்ந்தவை விதியோ அல்லது எதேச்சையாக நேர்ந்தது என்றோ கூறினாலும் பல்வேறு அரசியல் மற்றும் தொழில் பிரபலங்கள் இந்த மர்மங்களின் காரணத்தால் பெருவுடையார் கோயில் படி ஏறாமல் தவிர்த்து  உள்ளனர். என்னதான் சபிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் இராஜேந்திர சோழ  சக்ரவர்ததிகளின் ஆட்சியின் கீழ் சோழியம் தழைத்தோங்கி இருந்தது. 

      பெருவுடையார் கோயிலின் சாபங்களை போக்குவதாக கூறி கோயிலின் உள்ளே இரண்டு  நாட்கள் தியான வகுப்புகள் நடத்த திட்டமிட்டிருந்தார் வாழும் கலை அமைப்பின் ரவிசங்கர்ஜி.
 மனிதர்கள் சாபம் விமோச்சனம்  கொடுக்குமளவிற்கு எங்கள் பெருவுடையார் தர தாழ்ந்துவிட்டாரா என்ன. அப்படி ஏதும் நிகழ்ச்சி நடந்திருந்தால் சோழ குலத்தின் சாபத்திறக்கு ரவிசங்கர்ஜி ஆளாக நேர்ந்திருக்கும். நடக்காமல் தடுத்தது உயர்நீதிமன்றம்.
சிவபாதநேசன்  ஸ்ரீ ஸ்ரீ  ராஜராஜ சோழ சக்ரவர்த்தி அவர்களால்  ஸ்தாபிக்கப்பட்ட ராஜ லிங்கம் எங்கள்
பெருவுடையார். புயலால், பூகம்பத்தால் எவ்வித பஜஞ்சபூத நிகழ்வாலும் அசைக்க முடியாத மர்மம் பெருவுடையார் கோயில். சோழ குலமும்,  பெருவுடையார் கோயிலும் மர்மங்கள் சூழ்ந்தவையாக இருப்பின் அவை மர்மங்களாகவே  இருக்கட்டும்.                                                       திருச்சிற்றம்பலம்.
சோழம் வாழியவே! சோழர் புகழ் ஓங்குகவே!

Sunday, September 23, 2018

பொன்னியின் செல்வன் தழுவலா செக்கச் சிவந்த வானம் ?


செக்கச் சிவந்த வானம் மணிரத்தினம் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே செப்டம்பர் 27-இல் வெளியாகயுள்ளது. இப்படத்தின் இரண்டு டிரைலர்கள் ஆகஸ்ட் 24-லும், செப்டம்பர் 21-லும் வெளியானது. ஏ.ஆர். ரகுமான் இசையில் டிரைலர்கள் மிரட்டலாகவே உள்ளன. நிகழ்கால நிகழ்ச்சிகளையும், இதிகாச காப்பியங்களையும் அடித்தளமாக வைத்து திரைக்கதை அமைப்பதில் ஆர்வம் கொண்டவர் மணிரத்தினம்  அவர்கள். மகாபாரதத்தைத் தழுவி  தளபதியும், ராமாயணத்தைத் தழுவி ராவணனும், எம்.ஜி.ஆர்-கலைஞர் கதையை இருவர் திரைப்படமாகவும் எடுத்துத்திருந்தார் மணிரத்தினம். ஸ்ரீ ஸ்ரீ கோவிராஜ ராஜ கேசரி ராஜ ராஜ சோழக் சக்ரவர்தத்திகளை மையமாகக் கொண்டு கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் காவியத்தைத் திரைப்படமாக இயக்க வேண்டும் என்பது தன்னுடைய நீண்ட நாள் கனவாக சொல்லியிருக்கிறார் மணிரத்தினம். 

      சபிக்கப்பட்டதாக கூறப்படும் சோழ பேரரசின் வரலாற்றை திரைப்படமாக எடுக்க மிக சிலரே துணிந்துள்ளனர். 1958-ல் எம்.ஜி.ஆர் அவர்கள் இயக்கத்தில் உருவாக இருந்த பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டது. கமலஹாசனும் இம்முயற்சியில் இறங்கி கைவிட்டார். 1972-ல் ஏ.பி.நாகராஜன் அவர்களால் ராஜ ராஜ சோழன் திரைப்படமும், 2010-ல் செல்வராகவனால் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படமும் எடுக்கப்பட்டன. இந்த இரு இயக்குனர்களும் பின்னாளில் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகினர். மணிரத்தினமும் 2015-ல் பொன்னியின் செல்வன் திரைக்காவியம் எடுக்கும் முயற்சியில் இருந்ததாகக் கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் முக்கியப் பாத்திரங்களாக கருதப்படுவது சுந்தரச் சோழன்(ராஜ ராஜ சோழனின் தந்தை), ஆதித்யச் சோழன்(ராஜ ராஜ சோழனின் முதல் சகோதரன்), உத்தமச் சோழன்(ராஜ ராஜ சோழனின் சிற்றப்பா), ராஜ ராஜ சோழன்(அருள்மொழி வர்மன்), வந்தியத்தேவன்(ராஜ ராஜ சோழனின் ஆலோசகர்,படைத்  தளபதி,உற்ற நண்பர்). தற்போது வெளியாக இருக்கும் செக்கச் சிவந்த வானமும் பொன்னியின் செல்வன்  பாத்திரங்களைத் தழுவி எடுக்கப்பட்டிருக்குமோ என்று தோன்றுகிறது.

பெரியவர் (எ) சேனாபதியாக பிரகாஷ்ராஜ்:
சோழப் பேரரசைத் தழைத்தோங்கச் செய்ததில் அழகியச் சோழன் (எ) சந்தரச் சோழருக்கு பெரும் பங்குண்டு. சுந்தரச் சோழனுக்கு இரண்டு மகன்கள், ஒரு  மகள்; ஆதித்யச் சோழன், ராஜ ராஜ சோழன், குந்தவை தேவி. சுந்தரச் சோழருக்கு பிறகு அரியணை ஏறுவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இளவசாரக முடிச் சூடப்பட்டார் ஆதித்யச் சோழன்.  இப்படத்திலும் ஒரு மாபெரும் சமூக ஆளுமையாக அறிமுகப்படுத்தப்படுகிறார்  சேனாபதியான பிரகாஷ்ராஜ். அவருக்கு வாரிசாக மூன்று மகன்கள்.  அவருக்குப்பின் பொறுப்புகளை யார் கவினிப்பார் என்ற கேள்வியே படத்தின் கதையாக இருக்கக்கூடும். 

வரதன் (எ) வரதராஜனாக அரவிந்த்சாமி:

தன்னுடைய தந்தையின் அரியணை வாரிசாக அறிவிக்கப்பட்ட பின்னர் பல்வேறு அரச பொறுப்புகளை சிறப்பாக மேற்கொள்கிறார் ஆதித்யச் சோழன். வீரபாண்டியன் தலைமையிலான பாண்டியப் படைகளை மதுரைவரை துரத்திச் சென்று வீரபாண்டியனின் தலையைக் கொய்து வெற்றி வாகைச் சூடினார் ஆதித்யச் சோழன். தன தந்தைக்குப் பிறகு பொறுப்புகளை கவனிக்கும் மாவீரனாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார். பல்வேறு கனவுகளுடன்  வளம் வந்த ஆதித்யச் சோழன், மன்னராக முடிச்சூடப்படும் சில நாட்களுக்கு முன் எதிர்பாராத விதமாக கொல்லப்படுகிறார் .  வீரபாண்டியன் கொலைக்கு பழிவாங்க கொல்லப்பட்டார் என்று சொல்லப்பட்டாலும், தமிழக வரலாற்றின்  இன்றுவரை அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சாகவே ஆதித்யச் சோழனின் மரணம் உள்ளது. இப்படத்தில் சேனாபதியின் வாரிசாக அடுத்த பொறுப்புகளை கவனிக்கும் இடத்தில் உள்ளார் அரவிந்தசாமி. சேனாபதிக்கு பிறகு தன் ஆட்சி தான் அடுத்து என்ற கனவில் வளம் வருகிறார்.

தியாகு (எ) தியாகராஜனாக அருண் விஜய்: 

ஆதித்யச் சோழனின் மறைவிற்குப் பின்னர் தன் அண்ணன் மகனான உத்தமச் சோழனுக்கு முடிச்சூட்டுகிறார் சுந்தரச் சோழர். மன்னராக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே பல்வேறு அரசு பொறுப்புகளை வகித்துள்ளார் உத்தமச் சோழன். தனாதிகாரியாகவும், சிறு நில மன்னனாகவும், சுந்தரச் சோழரின் வெளியுறவு விவகாரங்களை கவினிப்பவராகவும் இருந்துள்ளார். மேலும் சோழ நாட்டில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களுக்கு காரணியாகவும், ஆதித்யச் சோழனின் கொலையில் தொடர்புடையவராகவும் கருதப்படுகிறார். 12 ஆண்டுகள் சோழ தேசத்தை ஆட்சி செய்த உத்தமச் சோழன் மர்மனான முறையில் கொல்லப்படுகிறார்.   இப்படத்தில் இரண்டாம் வாரிசாக அருண் விஜய். அயல்நாட்டில் தன தந்தையின் தொழில்களை கவனித்துக் கொண்டிருக்கிறார். மேலும் தந்தையின் இடத்திற்கு வரத் துடிப்பவராகவும், குடும்பத்தில் குழப்பம் விளைவிப்பவராகவும்  காட்டப்படுகிறார். இவரை குடும்பத்ததுடன் கொலை செய்ய முயற்சி நடப்பதும் காட்டப்படுகிறது.

ஏத்தி (எ) எத்திராஜாக  சிலம்பரசன்:

உத்தமச் சோழனுக்கு பிறகு சோழப் பேரரசராகிறார் கடைக்குட்டியான மாவீரன் ராஜ ராஜ சோழன்  (எ) அருள்மொழிவர்மன். வரலாற்று ஆய்வாளர்கள் இவரைப் பற்றி குறிப்பிடுகையில் "self made, free styled personality" என்றே குறிப்பிடுகின்றனர். தன் சகோதரன் ஆதித்யச் சோழனின் மறைவிற்குப் பிறகு தனக்கு நாடாளும் ஆசை இருந்தாலும் தன்  சிற்றப்பாவான உத்தமச் சோழனிடம் அரியணையை விட்டுக்  கொடுத்தார். அதுமட்டுமின்றி அரியணை ஏறும்வரை பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பல அரச வேலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். சோழப் பேரரசின் பெருங்காவலனாகவும், சிறந்த ஒற்றர் படையையும் நிர்மாணித்து வந்துள்ளார். இப்படத்தில் குடும்பத்தின் கடைக்குட்டி சிலம்பரசன். வெளிநாட்டில் வசிப்பவராகவும், பின்னாளில் தன் குடும்பத்திற்கு நேரும் பல்வேறு ஆபத்துக்களில் இருந்து அவர்களை காப்பவராகவும், "வந்தா ராஜாவாகத் தான் வருவேன்" என்ற வசனத்தில்மூலம் தன தந்தையின் இடத்திற்கு ஆசைப்படுபவராகவும் காட்டப்படுகிறார். 

ரசூல் (எ)  ரசூல் இப்ராஹிமாக  விஜய் சேதுபதி:

வல்லவராயன் வந்தியத்தேவன். ராஜ ராஜ சோழனின் நம்பிக்கைக்குரிய மாபெரும் மாவீரன். ராஜ ராஜ சோழனின் முதல் வெற்றியான காந்தளூர் சாலை போர் தொடங்கி பல்வேறு நிலைகளில் அவருடன் நின்றுள்ளார் வந்தியத்தேவன். இவர்களின் நட்பின் உச்சமாக தன்னுடைய சகோதரி குந்தவை தேவியை வந்தியத்தேவனுக்கு மணம் முடிக்க சம்மதம் தெரிவித்தார் ராஜ ராஜ சோழன். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக, சேனாபதி குடும்பத்திற்கு நெருக்கமானவராக காட்டப்படுகிறார் விஜய் சேதுபதி. இராண்டாம் டிரைலரின் இறுதியில் சிலம்பரசனுடன் சேர்ந்து யாருடனோ சண்டியிடுவது போலவும், அவருடன் சேர்ந்து வெற்றிக்களிப்பில் நடந்து வருவது போலவும் காட்டப்படுகிறது. 

இப்பாத்திரங்களை நினைவில் வைத்தது தான் மணிரத்தினம் இப்படத்தை இயக்கினாரா இல்லலையா என்பதைப் பற்றி திரைப்படம் வெளியான பின்பு தான் முடிவுக்கு வர இயலும். அப்படி இருப்பின் இன்னும் பல சுவாரிஸ்யமான பாத்திரங்களையும் மணிரத்தினம் உள்ள புகுத்தி இருக்கக்கூடும்.  ஏதோ என் சிறுமூளைக்கு எட்டியவற்றை எழுதியுள்ளேன். செக்கச் சிவந்த வானம் படம் பார்த்த பின்பு நான் எழுதியதில் அர்த்தம் இருப்பதாக நீங்கள் கருதினால் என்னையும் ஒரு அறிவாளியாக ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில் ஏதோ மூடன் உளறிவிட்டான் என்று உங்கள் வீட்டுப் பிள்ளையாக கருதி மன்னித்துவிடுங்கள். 

Wednesday, May 30, 2018

குமாரதேவர் மடம், விருத்தாசலம்


கர்நாடகவைச் சேர்ந்த மன்னன் ஒருவன் கோவை பேரூர் ஆதினம் சாந்தலிங்க சுவாமிகளின் பெருமைகளைக் கேள்வியுற்று அவரின் சீடனாகி துறவறம் பூண்டு சிவத்தொண்டாற்ற விரும்பினான். சாந்தலிங்க சுவாமிகளை அம்மன்னன் அனுகியபோது, சீடனாக ஏற்க மறுத்துவிட்டார். இருப்பினும் மடத்தில் தங்கி தொண்டாற்ற அனுமதித்தார். இந்த காலகட்டத்தில் மன்னனுக்கு பல்வேறு கடினமானா பணிகளை கொடுத்து சோதனை செய்தார். மன்னனும் அச்சோதனைகளில் வெற்றி பெற்று, மடத்தில் கடும் தவம் புரியளானான். இதனால் மனமிரங்கிய சாந்தலிங்கர், மன்னனை தன் ஆஸ்தான சீடராக ஏற்றுக்கொண்டு பல்வேறு யோக சித்திகளைக் போதித்தார். சிலகாலம் கழித்து தன் சீடரை அழைத்த சாந்தலிங்கர் "உன் மணம் விரும்பும் இடத்தில் உனக்கான மடத்தினை அமைத்து இறைத் தொண்டாற்றுவாயாக..." என்று பணித்தார்.


     அதற்கான இடத்தை அறிய வேண்டி தவம் புரிந்தார் அச்சீடர். தவப்பயணாக திருமுதுகுன்றம் அவருக்கேற்ற இடமாக தென்பட்டது. விருத்தாச்சலம் என்னும் திருமுதுகுன்றத்திற்கு வந்த சீடர் மடமொன்றை நிறுவி இறைத்தொண்டாற்றி அங்கேயே ஜீவ சமாதியும் அடைந்தார். இறைத்தொண்டராக மாறிய மன்னனின் பெயர் குமாரத்தேவர். அம்மடமே விருத்தாசலத்தில் உள்ள துறையூர் ஆதினத்திற்குட்பட்ட குமாரத்தேவர் மடம். ஜோதி லிங்கத்தை நிறுவி அதனருகில் சமாதியானர் குமாரத்தேவர்.


        சென்னை-திருப்போரூரில் உள்ள கந்தவேல் (எ) கந்தசாமி திருக்கோயிலை புணர்நிர்மானம் செய்து மக்களின் பார்வைக்கு கொண்டு வந்த சிதம்பரதேவர் (எ) சிதம்பர சுவாமிகள் குமாரத்தேவரின் சீடாவார். குமாரத்தேவர் மடத்தின் 7வது பட்டம் சிதம்பர சுவாமிகள். இவர் கனவில் மயில் தோன்றவே, தன் குரு குமாரத்தேவரிடம் இதைப்பற்றி கேட்டார். இதற்கான விடை மதுரை மீனாட்சியால் மட்டுமே கிடைக்குமென மதுரையை நோக்கி பயணப்பட சொன்னார். மதுரையில் 45 நாட்கள் கடுந்தவம் புரிந்த சிதம்பரர், திருப்போரூர் முருகன் கோயிலை புணர்நிர்மானம் செய்ய மீனாட்சி அம்மன் பணித்ததும், விருதை வந்து சமாதி அடையும் தருவாயில் இருந்த தன் குருவை தரிசித்துவிட்டு திருப்போரூர் நோக்கி புறப்பட்டார். திருப்போரூர் சென்று பல நாட்கள் முருகன் கோயிலை தேடியும் கிடைக்கவில்லை. ஒரு நாள் முருகப்பெருமான், குமாரத்தேவர் உருவில் சிதம்பர சுவாமிகளுக்கு தரிசனம் தந்து கோயில் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டினார். குமார்த்தேவர் மடத்தின் 6வது பட்டமும் சிதம்பர சுவாமிகள் என்பவர் தான் இருந்துள்ளார். இவர் நின்றநிலையில் மடத்தின் உள்ளேயே சமாதி வைக்கப்பட்டுள்ளார். இத்தலம் மிருகசிரீஷ நட்சத்திரம் கொண்ட  மிதுன ராசிகாரர்களுக்கான பரிகார தலம் ஆகும். வீர சைவ மடங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மடங்களில் குமாரத்தேவர் மடமும் ஒன்று.

Saturday, September 16, 2017

பார்ப்பனீய எதிர்ப்பு - திராவிட நாடு - மாநில சுயாட்சி - அண்ணா


பார்ப்பனீயத்திற்கு  எதிரான முழக்கம் பெரியார் காலத்தில் அல்ல அதற்கு பல ஆண்டுகள் முன்னதாகவே எழத் தொடங்கிவிட்டது. 1850 பிரிட்டிஷ் இந்தியாவில் மெட்ராஸ் மாகாணத்தில் பார்ப்பனீயர்களின் ஆண்கள் மக்கள் தொகை 3.2% தான். பார்ப்பனரல்லாத பிறர், இஸ்லாமியர், கிருத்துவர் உட்பட ஆண்களின் மக்கள் தொகை 95%. ஆனால் அரச பதவிகளில், அரசு அலுவலகங்களில் பார்ப்பனர்களின் ஆதிக்கமே ஓங்கி இருந்தது. இணை ஆட்சியர்களாக, நீதிபதிகளாக அவர்களின் கரங்களே ஓங்கி இருந்தன. மற்றவர்களுக்கு வாய்ப்புகள் தரப்பட்டாலும், முன்னுரிமை அவர்களுக்கே என்று பிரித்தாளும் கலையின் வல்லுனர்களான வெள்ளையர்கள் எழுதப்படாத சட்டமாக வைத்திருந்தனர். அரசியல், சமுகம், பொருளாதாரம் என அனைத்திலும் பார்ப்பனவர்களுக்கும், மற்றவர்களுக்கும் வித்தியாசங்கலும், உரிமை பங்கீடுகளும் வெவ்வேறாகவே இருந்தது. அக்காலத்தில் மெட்ராஸ் மாகாண பிராமணர்கள் தங்களை மைலாப்பூர்(சேத்துப்பட்டு ஐயர்கள் மற்றும் வெம்பாக்கம் இயங்கார்களை  உள்ளடக்கியது),  எழும்பூர், ராஜாஜீ தலைமையிலான சேலம் ஐயங்கார்கள்  என மூன்று பிரிவுகளாக செயல்பட்டு வந்தனர். பிரமானவர்களின் பிரதிநிதிகளாக இந்த குழுக்களின் தலைவர்கள் செயல்பட்டனர்.  இவர்களின் அட்டகாசங்களை எதிர்த்து குரல்கள் வலுப்பெற தொடங்கின. பார்ப்பனரல்லாத மக்களின், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தென்னிந்திய நல உரிமைச் சங்கம் நிறுவப்பட்டது. இந்த இயக்கமே அரசியல் அங்கீகாரைத்திற்காக நீதிக்கட்சியாக உருப்பெற்றது.  

பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக நீதிக்கட்சியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பார்ப்பனரல்லாதாரின் உரிமை சாசனத்தை 1916-ல் கையெழுத்திட்டார் சர் தியாகராயர்.  அதன்பின் 1920 மாகாணத் தேர்தலை காங்கிரஸ் புறக்கணிக்க நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 1920 முதல் 1937 வரை 13 ஆண்டுகள் ஆளும் கட்சியாகவும், 4 ஆண்டுகள் எதிர் கட்சியாகவும் இருந்தது. 1937-ல் அன்றைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியாரின் சுய மரியாதை இயக்கத்துடன் கைக்கு கோர்த்தது  நீதிக்கட்சி.  1938 முதல் 1944 வரை பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக இருந்தார். 1944-ல் நீதிக்கட்சி, சுய மரியாதை இயக்கம் இருண்டயும் இணைத்து திராவிடர் கழகத்தை நிறுவினார் பெரியார். திராவிட கழகம் ஓட்டு அரசியலில் ஈடுபடாதென்றும், சமூக நீதிகளை மீட்டெடுக்கும் இயக்கமாகவே திகழும் என்று அறிவித்தார் பெரியார். பெரியாரின் மிகப்பெரிய பக்கபலமாக கருதப்பட்ட அண்ணாதுரை, திராவிட கழகம் தேர்தல்களில் பங்கெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.  இதுபோன்று மேலும் ஒரு சில கொள்கை முரண்பாடுகளால் இருவருக்கும் இடையேயான உறவில் விரிசல் விழத் தொடங்கியது. 1947-ல் இந்தியா சுதந்திர நாளை கருப்பு தினமாக பெரியார் அனுசரிக்கச் சொன்னதும், அவரைவிட 40 வயது இளையவரான மணியம்மயை திருமணம் செய்ததும் அண்ணாவின் வெளிநாடாப்புக்கு காரணமாகியது.  பெரியாரின் செயகளால் அதிருப்தியடைந்த பல்வேறு தலைவர்கள் அண்ணாவுடன் கைக்கோர்த்தனர். 1949 செப்டம்பர் 17-ல் திராவிட முன்னேற்றக கழகம் உதயமானது. 

திராவிட நாடு : 
பூர்வகுடிகளான திராவிடர்களுக்கு திராவிட நாடு அவசியம் என்பதை ஆரம்பம் முதலே பெரியார் வலியுறுத்தி வந்தார். இந்த கோரிக்கையை ஆங்கிலேய ஆட்சியர்களின் கவனத்திற்கும் கொண்டு சேர்த்திருந்தார் பெரியார். "இந்தியாவிலிருந்து யாரேனும் பிரிந்து செல்ல விரும்பினால் 'வேண்டாம்' என்று அவர்களை காங்கிரஸ் அவர்களை வேண்டிக்கொள்ளும். அதையும் மீறி பிரிந்து செல்ல விரும்பினால் அதை கண்ணியத்துடன் அனுமதிக்கும்," என்று நேரு 2.8.1945-ல் ஸ்ரீநகரில் பேசி இருந்தார். பெரியாரின் தம்பியான அண்ணாவும் திராவிட நாடு கொள்கையை இருகப்பற்றிக் கொண்டார். முதலில் தமிழ் பேசும் மக்களை உள்ளடக்கியாத கருதப்பட்ட திராவிட நாடு பின்னர் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக உருப்பெற்றது. ச ஆனால் 1956 மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்படி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. திராவிட நாடு கோரிக்கைக்கு இது இது பெரும் பின்னடைவுவாக கருதப்பட்டது. திராவிட நாடு கோரிக்கைகள் வலுப்பெற்று விடக்கூடாது என்பதற்காக மத்திய காங்கிரஸ் அரசு 'பிரிவினை தடைச்ச சட்டம் 1963' கொண்டு வந்தது.  


"திராவிட பெருங்குடி மக்களின் உரிமைகள் அழிக்கப்படுகின்றன; வளங்கள் சுரண்டப்படுகின்றன; தனித்தன்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன; வாழ்வு அடிமைப்படுத்தப்படுகின்றது. இந்தக் காரணங்களிலிருந்து மெல்லத்தான், நாந்திகள் தனி நாடு கேட்கின்றோம். வேறு வழி எதுவம் இல்லாததால்தான், தனி நாடு வேண்டும் என்கின்றோம். நாங்கள் ஏற்றுக்கொள்ளுகிற அளவிற்கு வேறு வழி காட்டுங்கள். அதைப் பற்றி சிந்திக்கின்றோம்", என்று பிரிவினைவாத தடைச் சட்டம் (1963) மீதான விவாதத்தின் போது  அண்ணா பேசினார். பிரிவினைவாத தடைச் சட்டம்படி இந்தியில் இருந்து பிரிவினை கேட்கும் கேட்கும் இயக்கம்/கட்சி தடை செய்யப்படும் என்றும், பிரிவினை பேசும் தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என்றும்  கூறியது.  இதனைத் தொடர்ந்து அண்ணா திராவிட நாடு கொள்கையை கைவிட்டார். 

மாநில சுயாட்சி : 
இந்திய இறையாண்மைக்கு எதிரானதாக அறிவிக்கப்பட்டதிற்கு மாற்றாக மாநில சுயாட்சி கோரிக்கை முன் வைக்கப்பட்டது. தனி நாடு என்பதற்கும் மாநில சுயாட்சி என்பதற்கும் எட்டாத தூரம் தான் என்றாலும் சுயாட்சி மூலம் ஒரு சில உரிமைகளையாவது காத்துக்கொள்ள முடியும் என்று நம்பினார் அண்ணா. அதற்கு முதல் படியாக  ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக வேண்டும் என்று தீர்மானித்தார். மாநிலத்தின் நலன் சார்ந்து முடிவெடுக்கவும் உரிமைகள் மாநில கட்சியிடமே  இருக்க வேண்டும். அதுவரை தமிழகத்தை ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியை வீட்டிற்கு அனுப்பின்னால் மட்டுமே இது சாத்தியமாகும். பக்கத்தில் இருக்கும் குடிசை வீட்டில் தீப்பிடித்து விட்டால் அருகில் இருக்கும் நாம்தான் அதில் தலையிட முடியும். பக்கத்துக்கு ஊருக்கு சென்று ஆட்களை கூட்டி வந்து தீர்க்க சொல்வது உசிதம் அல்ல. இதேபோல தான்  மாநில மக்களின் சுக துக்கங்களோடு பின்னிபிணைத்திருப்பது மாநில அரசுகளே தவிர, மத்திய அரசு அல்ல.

பொது வாழ்வில் மக்களோடு மக்களாக, மக்களில் ஒருவராக மாநில அரசுதான் இருக்க முடியும். இதை கருத்தில் கொண்டே தி.மு.க வை வலுப்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என அண்ணா முயற்சித்தார். 1965-ல் நடைப்பெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தி.மு.க மாபெரும் பங்காற்றியது; மக்களின் செல்வாக்கையும் பெற்றது. அதன் காரணமாக 1967 சட்டசபை தேர்தலில் வரலாற்று வெற்றியைப் பெற்றது தி.மு.க. அண்ணா முதல்வர் ஆனார்.  அண்ணா அவர்களின் தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதாகவே வரலாறு சொல்கிறது. சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கினார் அண்ணா. அண்ணாவின் ஆட்சிக்கு காலத்தில் தான் மெட்ராஸ் மாகாணம் "தமிழ் நாடு" என்ற பெயர் மாற்றம் பெற்றது. ஒரு மாநில கட்சியாக மத்திய அரசின் மக்கள் நல நடவடிக்கைகளை ஆதரித்தும், மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும் குரல் எழுப்பி அரசியல் செய்தது தி.மு.க. 

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சியை ஆட்சியில் கொண்ட  ஒரு  சில மாநிலங்களின் நிலை பரிதாபம் தான்.  ஒரு தேசியக் கட்சியின் மாநில முதல்வர், மத்திய அரசு என்ன சட்டங்கள் கொண்டு வந்தாலும், அது மாநில மக்களின் நன்மையை பாதிக்கும் என்றாலும், மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் என்றாலும் வேறு வழி இன்றி அதை நிறைவேற்றியாக வேண்டும். மக்களுக்கு ஆதரவாக மத்திய அரசை, தன் சொந்தக் கட்சியை எதிர்த்து குரல் கொடுக்கும் தைரியம் எவர்க்கும் வந்துவிட போவதில்லை. மணிப்பூர், மேகாலயா, கோவா போன்ற மாநிலக் காட்சிகள் வலுப்பெறாத மாநிலங்களே  இதற்க்கு சான்று.


அக்காலத்தில் மாபெரும்  தேசியக் கட்சியை ஆட்சியிலிருந்து இறக்கி இன்றுவரை தமிழகத்தில் ஆட்சி அமைப்பதை அவர்களுக்கு ஒரு எட்டாக கனியாக  வைத்திருப்பதே திராவிட கட்சிகளின் பெரும் வெற்றி.  அதிகாரங்கள் அணைத்ததும் மத்திய அரசிடமே குவித்தட்டுக் கொண்டால் மாநில அரசுகள் எதற்கு. இந்தியாவைப் போன்ற பல்வேறு கலாச்சாரம், மொழி, பொருளாதாரத்தில் பல்வேறுபட்ட மக்களை கொண்டுள்ள நாட்டில் கல்வி, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம், சமூக நலன், உணவு, தொழில் வளம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மத்திய அரசுகள் தலையிடாமல் இருந்தாலே மாநில அரசுகள் சிறப்பாக செயலாற்ற முடியும். மாநில அரசுகளுக்கே பிரச்சனைகளின் உள்ளீடுகள் தெரியும். அவர்களால் மட்டுமே அதற்கான தேர்வை யோசிக்க முடியும் என நம்பியவர் அண்ணா.

ஆனால் அண்ணாவால் நிறுவப்பட்ட கட்சியும் சரி, அண்ணாவின் பெயரால் நிறுவப்பட்ட்ட கட்சியும் சரி ஒரு கட்டத்திற்குமேல் தன்மானத்தை  இழந்து  மத்திய அரசுகளிடம் சரணடைந்தே கிடந்திருக்கின்றன.  ஹிந்தி திணிப்பு, நீட், மத்திய உணவு பாதுகாப்பு மசோதா, நவோதயாத் பள்ளிகள், மீத்தேன், ஹைட்ராகார்பன்  என எல்லாவற்றிற்கும் வாசளைத் திறந்து வைத்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கினர். இறந்தவர்களின் ஆன்மாவின் விருப்பப்படி ஆட்சி நடந்துவதாக சொல்லி மாநில மக்களை அடகு வைக்கும் இவர்களின் துரோகச் செயல்களை     அண்ணாவின் ஆன்மாக்கூட மன்னிக்காது. 




Wednesday, August 16, 2017

உனக்குள் தொலைந்து போன வேதா ...



விமர்சனம்: 

              விக்ரம் - வேதா. சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம்.  நல்ல படம். அற்புதமான கதை அமைப்பு. 
புஷ்கர்-காயத்ரியின் இயக்கம் செம.  ஷாமின்  இசையில் பாடங்கள், பின்னணி இசை கோர்ப்பு பிரமாதம். விக்ரமாக மாதவன்; ஒரு நல்ல comeback. வேதவாக விஜய் சேதுபதி; வழக்கம் போல் அலட்டிக்கொள்ளாமல் நடித்து இருக்கிறார். வசனங்கள் சூப்பர். ஒரு சில இடங்களில் வசனங்கள் தெறி ரகம். இது தான் படத்தின் சுருக்கிய வடிவிலான விமர்சனம். 

நம்ம கதை: 
                 நாம் சிறு வயதில் இருக்கும் போது பல்வேறு திரைப்படங்கள் பார்த்தோ  அல்லது நமது தந்தை, அவர்களின் நண்பர்கள் என்று யாரையாவது பார்த்தோ இவரைப்போல் நாம் ஆக வேண்டும் என்று ஒரு சிறு எண்ணம் எழுந்து இருக்கும். அந்த எண்ணம் தான் வாழ்வின் குறிக்கோள் என்று நாம் அப்போது முடிவு செய்து இருக்கமாட்டோம். அதுபோல் ஆக வேண்டும் என்று ஆசையாக இருந்து இருக்கும்; அவ்வளவுதான். வயதாக வயதாக ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கும் போதும்  நாம் இதுவாகவும் ஆகலாம் என்று நமது எண்ணத்தில் மாற்றங்கள் நிகழும். ஆனால் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்குள் நாம் செல்லும் அந்தத் தருணம் தான் நமது வாழ்வின் முக்கிய முடிவினை எடுக்கும் தருணமாக இருக்கின்றது. அப்போது தான் எதிர்காலத்தைப்பற்றிய  ஒரு தெளிவு பிறக்கும். எதிகாலத்தில் நாம் என்ன செய்ய போகிறோமோ அதைச் சார்ந்து கல்லூரியில் ஏதேனும் பிரிவு எடுத்து படிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். 

    ஒரு சிலர் பள்ளியில் இருக்கும்போதே தங்களின் எதிர்கால குறிக்கோள்களை நிர்ணயித்து கொள்ளும் அளவிற்கு தெளிவாக உள்ளனர். ஒரு சிலர் மருத்துவர் ஆக வேண்டும் என்றும், ஒரு சிலர் வழக்கறிஞராக வேண்டும் என்றும், ஒரு சிலர் I.A.S, I.P.S -க்கு செல்ல வேண்டும் என்றும், ஒரு சிலர் கட்டுமானப்  பொறியாளராக வேண்டும் என்றும் குறிக்கோள்களை நிர்ணயம் செய்துகொள்கின்றனர். இவர்கள் முதல் ரகம். இப்படி எந்த எண்ணமும் இல்லாமல் இருப்பவர்கள், ஏதேனும் ஒரு degree -யை வாங்கிவிட்டு கிடைக்கும் வேலைக்கு செல்லலாம் என்று இருப்பார்கள். இவர்கள் இரண்டாம் ரகம். 

                 இந்த இரண்டாம் ரகத்தினருக்கு எந்தக் கவலையும் இல்லை. இவர்கள் கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில்தான் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க தொடங்குவார்கள். ஆனால் இந்த முதல் ரகத்தினர் இருக்கிறார்களே அவர்களுக்கு ஆரம்பமே சிக்கலாக இருக்கலாம். அவர்கள் தங்கள் குறிக்கோளை கனவு காண தொடங்கியிருப்பார்கள். அந்த கனவை எண்ணங்களாய் தங்களுள் விதைக்கத்  தொடங்கியிருப்பார்கள். அந்த விதை விருக்ஷமாக வளர்ந்து கணிகளைத் தரும் என்று நம்பிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களின் இந்த எண்ண ஓட்டத்துக்கு பெற்றோர்கள் ஒத்து வரவேண்டுமல்லவா. இங்குதான் முதல் சிக்கல் தொடக்கம். பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கென்று ஒரு கனவு வைத்திருப்பார்கள், அதன்படி திட்டங்களை வகுத்திருப்பார்கள். பெற்றோர்களின் கனவுகளுக்கும் பிள்ளைகளின் கனவுகளுக்கும் நிகழும் அந்த மனப்போராட்டமே அந்த பிள்ளைகளின் எதிர் காலத்தை தீர்மானிக்கிறது. பெற்றோர்களின் சம்மதத்தோடு பலர் தங்களின் கனவுகளை நோக்கி நடைபோட தொடங்கிவிடுகின்றனர். பலர் தங்களின் பெற்றோர்களின் வற்புறுத்தல்களுக்கு இணங்கி கனவுகளை சிதைத்து, அவர்களின் ஆசையா நிறைவேற்ற  கல்லூரி படிப்பை தொடங்க செல்கின்றனர்.   
                  நான் மேலே சொன்ன இரண்டு ரக இளைஞர்களுக்கு எதிர்மறையான இன்னொரு ரகம் உண்டு.    எதற்காகவும், யாருக்காகவும் தங்களின் கனவுகளையும், குறிக்கோளையும் விட்டுக்கொடுக்காதவர்கள். பெற்றோர்களிடம் சண்டையிட்டு தங்களுக்கு தேவையானதை செய்து கொள்ள முற்ப்படுபவர்கள். ஒரு விஷயத்தில் வெற்றி பெற்றாலும், ஏதேனும் ரூபத்தில் சவால்களை சந்திக்க விருப்பமுள்ளவர்கள். இவர்கள் வாழ்க்கையில் எடுக்கும் முக்கிய முடிவுகள் விமர்சனத்திருக்குள்ளாகும்; ஏளனம் செய்யப்படும். இவர்கள் எந்த ஒரு முடிவையும் தீர்க்கமாக சிந்தித்து, பல கோணங்களில் யோசித்து, தொலைநோக்கு பார்வையுடன் எடுப்பவர்கள். தங்களின் கனவுகை அடைய எத்தனைக் கஷ்டங்களையும் தாங்கிக்கொள்ள தயாராக உள்ளவர்கள்.  குடும்பம், பெற்றோர்கள், மனைவி, காதலி, நண்பர்கள் என யாருக்காகவும் தங்களை மாற்றிக்கொள்ளாமல், தங்களின் உண்மை இயல்புடன் இருப்பவர்கள். விக்ரம் - வேதா திரைப்படத்த்தில் விஜய் சேதுபதி ஏற்றிருக்கும் கதாப்பாத்திரமும் அப்படிதான். இந்த  படத்தில் வில்லன் என்றோ ஹீரோ என்றோ சொல்லிவிட முடியாத அளவுக்கு ஒரு கதாப்பாத்திரம் வேதா. வேதாவின் லட்சியம் என்று பெரிதாக ஒன்றும் இல்லை. அந்த பகுதியில் அவன் ஒரு பிரபலமாக, சொல்லப்போனால் ஒரு Godfather-ஆக இருக்க வேண்டும். அதற்கான வழிகளை ஏற்படுத்தி, யாருக்காகவும் விட்டுக்கொடுக்காமல் அதில் பயணம் செய்பவன். தன்னை நம்பி இருப்பவர்களுக்கு எதையும் செய்யும் இயல்பு என்று நிற்கிறது வேதாவின் கதாப்பாத்திரம். விக்ரமாக மாதவன். நேர்மையான போலீஸ் அதிகாரி. விக்ரமாக யார் வேண்டுமானாலும் இருந்து விடலாம். ஆனால் வேதவாக இருப்பது அனைவருக்கும் அமைந்துவிடாது.
           
                கனவுகளைத் துறத்துவதாக நாம் நினைத்து செய்துகொண்டிருக்கும் பயணத்தின் ஒரு கட்டத்தில்தான் அதற்கான முதல் அடியைக்கூட நாம் இன்னும் எடுத்துவைக்கவில்லை என்பதை உணர்கிறோம். அந்த விழிப்பை அடையும் போது நாம் எங்கே சென்று நிற்போம் என்று பார்த்தால், ஒரு சாதாரணனாக அன்றாடம் தேவைகளைப் பூர்த்தி செய்ய  அலைந்துக் கொண்டிருக்கும் கூட்டத்தில் ஒருவனாக நின்றுகொண்டிருப்போம். இதனை  நாம் உணரும் போது, நமது கனவு பயணத்திலிருந்து நாம் வெகு தூரம் விலகி சென்றிருப்போம். குடும்பம், மனைவி, குழந்தைகள் என வாழ்க்கை திசை மாறி இருக்கும். அனைத்தையும் ஒருங்கிணைத்து தமது கனவுகள் நோக்கி செல்பவர்கள் வெகு சிலரே. நம் கதையின் நாயகன் "வேதவாக" வாழ்வதற்கு ஒரு சிலருக்கே நேரம், காலம், சூழல் என அனைத்தும் வாய்ப்பளிக்கிறது. இப்படியாக நம்மில் பலர், பல காரணங்களுக்காகவும்  நம்மேல் சுமத்தப்படும் பொறுப்புகளுக்காகவும்  நமக்குள் இருக்கும் வேதாவை தொலைத்துவிட்டு அலைந்து கொண்டிருக்கிறோம்.

Chat Box