Wednesday, May 30, 2018

குமாரதேவர் மடம், விருத்தாசலம்


கர்நாடகவைச் சேர்ந்த மன்னன் ஒருவன் கோவை பேரூர் ஆதினம் சாந்தலிங்க சுவாமிகளின் பெருமைகளைக் கேள்வியுற்று அவரின் சீடனாகி துறவறம் பூண்டு சிவத்தொண்டாற்ற விரும்பினான். சாந்தலிங்க சுவாமிகளை அம்மன்னன் அனுகியபோது, சீடனாக ஏற்க மறுத்துவிட்டார். இருப்பினும் மடத்தில் தங்கி தொண்டாற்ற அனுமதித்தார். இந்த காலகட்டத்தில் மன்னனுக்கு பல்வேறு கடினமானா பணிகளை கொடுத்து சோதனை செய்தார். மன்னனும் அச்சோதனைகளில் வெற்றி பெற்று, மடத்தில் கடும் தவம் புரியளானான். இதனால் மனமிரங்கிய சாந்தலிங்கர், மன்னனை தன் ஆஸ்தான சீடராக ஏற்றுக்கொண்டு பல்வேறு யோக சித்திகளைக் போதித்தார். சிலகாலம் கழித்து தன் சீடரை அழைத்த சாந்தலிங்கர் "உன் மணம் விரும்பும் இடத்தில் உனக்கான மடத்தினை அமைத்து இறைத் தொண்டாற்றுவாயாக..." என்று பணித்தார்.


     அதற்கான இடத்தை அறிய வேண்டி தவம் புரிந்தார் அச்சீடர். தவப்பயணாக திருமுதுகுன்றம் அவருக்கேற்ற இடமாக தென்பட்டது. விருத்தாச்சலம் என்னும் திருமுதுகுன்றத்திற்கு வந்த சீடர் மடமொன்றை நிறுவி இறைத்தொண்டாற்றி அங்கேயே ஜீவ சமாதியும் அடைந்தார். இறைத்தொண்டராக மாறிய மன்னனின் பெயர் குமாரத்தேவர். அம்மடமே விருத்தாசலத்தில் உள்ள துறையூர் ஆதினத்திற்குட்பட்ட குமாரத்தேவர் மடம். ஜோதி லிங்கத்தை நிறுவி அதனருகில் சமாதியானர் குமாரத்தேவர்.


        சென்னை-திருப்போரூரில் உள்ள கந்தவேல் (எ) கந்தசாமி திருக்கோயிலை புணர்நிர்மானம் செய்து மக்களின் பார்வைக்கு கொண்டு வந்த சிதம்பரதேவர் (எ) சிதம்பர சுவாமிகள் குமாரத்தேவரின் சீடாவார். குமாரத்தேவர் மடத்தின் 7வது பட்டம் சிதம்பர சுவாமிகள். இவர் கனவில் மயில் தோன்றவே, தன் குரு குமாரத்தேவரிடம் இதைப்பற்றி கேட்டார். இதற்கான விடை மதுரை மீனாட்சியால் மட்டுமே கிடைக்குமென மதுரையை நோக்கி பயணப்பட சொன்னார். மதுரையில் 45 நாட்கள் கடுந்தவம் புரிந்த சிதம்பரர், திருப்போரூர் முருகன் கோயிலை புணர்நிர்மானம் செய்ய மீனாட்சி அம்மன் பணித்ததும், விருதை வந்து சமாதி அடையும் தருவாயில் இருந்த தன் குருவை தரிசித்துவிட்டு திருப்போரூர் நோக்கி புறப்பட்டார். திருப்போரூர் சென்று பல நாட்கள் முருகன் கோயிலை தேடியும் கிடைக்கவில்லை. ஒரு நாள் முருகப்பெருமான், குமாரத்தேவர் உருவில் சிதம்பர சுவாமிகளுக்கு தரிசனம் தந்து கோயில் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டினார். குமார்த்தேவர் மடத்தின் 6வது பட்டமும் சிதம்பர சுவாமிகள் என்பவர் தான் இருந்துள்ளார். இவர் நின்றநிலையில் மடத்தின் உள்ளேயே சமாதி வைக்கப்பட்டுள்ளார். இத்தலம் மிருகசிரீஷ நட்சத்திரம் கொண்ட  மிதுன ராசிகாரர்களுக்கான பரிகார தலம் ஆகும். வீர சைவ மடங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மடங்களில் குமாரத்தேவர் மடமும் ஒன்று.

No comments:

Post a Comment